இரும்பிலிருந்து
விலகி
இலைகளோடு பழகிய
- என்
இதமான இருபது
மணிகள்.
ரொம்ப நாளைக்கப்புறம்
- ஒரு
ரம்மியமான சூழலில்
சுவாசிக்கும்
சுகம் கிடைத்தது.
அதுவொரு அழகான
கிராமம்.
அங்கே கழிக்கக்
கிடைத்த 20 மணிகளில்
என் மனது பிரவாகித்த வரிகளை
உங்களோடு பகிர்கிறேன்.
கிராமங்களில்
காலைமுதல் மாலைவரை
காதில் விழும்
குயில், குருவிகளின்
காதுக்கினிய
சங்கீதம்
ஒரே மாதியே
கேட்கிறது
நகர் வீட்டில்
"கோலிங்
பெல்."
இலைகள் தாலாட்டி
அள்ளி அள்ளி
ஒக்சிஜன் தடவி
அந்தக் காட்டில்
கிடைத்த
இதமான உயிர்வளி.
இரும்பில் சூடேற்றி
தாராளமாய்த்
தூசு தடவிய
சுமையான சுவாசம்
நகர் வீட்டில்.
"சீலிங்
fபேன்."
புற்களுக்குள்
கால்கள் ஊடுருவ,
கால்களுக்குள்
ஊடுருவுது,
கிராமத்துப்
புள் நுனியில்
குடியிருக்கும்
பனிக்குளிர்ச்சி.
மூலிகை நடை.
நகர் வீட்டில்,
சுண்ணாம்பு
சுடுகிறது.
மல்லாக்கப்
படுத்துக்கொண்டு
மேனி குளிர்கிறது
என்கிறோம்.
"மார்பல்
தரைகள்."
கையால் பறித்து
கண்ணெதிரே நசித்து
தொண்டை குளிர்க்கிறது
காட்டுத் தோடம்பழம்.
கோர்டியல் கரைத்து,
குளிராக்கிக்
குடித்து
தொண்டை வருத்தம்.
காரணங் கேட்டால்
"கிளைமேட்
சேன்ஞ்".
கிராமத்தில்,
பெட்டி பெட்டிபோல
போதுமென்ற மனசுக்குப்
பெரிய்ய்ய்ய
வீடுகள்.
மயானமாய்க்
கிடக்கும் மாடிகளைத்
தேடித்தான்
பார்க்க வேண்டும்.
எறும்புகள்
போலவே
எக்டிவாகவே
இருக்குது
இயற்கை ஏசி
- தென்றல்.
இவ்வளவு காற்று
எங்கிருந்து வருகிறது ...?
பாவித்த எண்ணையைக்
கொண்டு
பலதையும் பொரிக்காதீங்க
ன்னு
படிச்சவங்க
சொல்லுறாங்க.
நகர் வீட்டில்,
எப்போதோ உள்வந்து
எங்குமே போக
வழியின்றி
திரும்பத் திரும்ப
சூடேற்றி
சிறைப்பட்டு,
சு(கெ)ட்டுப்போன
காற்றைத்தானே
சோபாவில் கிடந்தது
சுவாசிக்கிறோம்.
ஒருவழி ஜன்னல்
இருந்தும்
ஜன்னலற்ற ஜவுளிக்கடைகள்.
"நகர்
வீடுகள்"
காட்டு மர நிழலில்
கிணற்றுத் தண்ணீர்.
மூளை(லை) முடுக்கெல்லாம்
குளிர்க்குது
இருவேளைக் குளியல்.
குடித்துக்
குடித்தே குளிருது குடல்.
நகர் வீட்டில்
கொட்டுது கேசம்,
கெட்டது தேகம்.
நானூறு ரூபா
ரோசா
நாலே நாளில்
நாசம்.
தேனீரில்கூட
மணக்குது
க்ளோரின் க்லோனின்
வாசம்.
"க்ளோரின்
விடியல் - குளியல் - சமையல் - குடியல்"
பழகப் பழக
பாதங்கள் பலம்பெறும்
பழைய பாதைகள்.
பார்க்கும்
திசையெல்லாம்
பச்சைப் பசேல்
ஆறுதல்கள்.
ஆனால்,
பாதைகள் மெருகேற
மெருகேற
பயணம் சுகமாகச்
சுகமாக
நம் சிந்தனைகள்
கொன்க்ரீட்
காட்டுக்குள்
பிரச்சினைகளுக்குப்
பிரசவம் பார்க்கின்றன.
நாமிருக்கும்
நகர் வீடும்,
நாம் நுகரும்
நகர்ச் சூழலும்
"ஒன்றில்
மயானமாய் இல்லையேல் மெயின்றோடாய்."
இங்கேயே இப்போதே
ஈரஞ்சு பர்சஸ்
மண்துண்டு
வாங்கிப்போட
விரும்புது நெஞ்சு.
வந்து வந்தாவது
கொஞ்ச நாள்
வாழ்ந்துவிட்டுப்
போகலாமே.
நகருங்கள்.
நகரங்களை விட்டுக் கொஞ்ச நாள்
நிம்மதியாக நகருங்கள்.
கிராமங்களில் கொஞ்ச நாளாவது
குடியிருந்து களித்திருங்கள்.
இறைவனை நினைத்திருங்கள்.
முஹம்மத் ஸன்ஸீர்.
19.01.2016,
செவ்வாய்க்கிழமை.
நன்றி:
சித்திரம் ஏ.எஸ்.கே.என்